தமிழகம்

விழுப்புரத்தின் அ.மர்லிமா சிறந்த திருநங்கையாக தேர்வு: முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: மாற்று பாலினத்தவர் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.மர்லிமாவுக்கு சிறந்த திருநங்கை விருதினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ளச் செய்திக் குறிப்பில், "சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவரை சிறப்பிக்கும் வகையில், 2022-ம் ஆண்டிற்கான, சிறந்த திருநங்கை விருது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.மர்லிமாவுக்கு வழங்கப்பட்டது.

மர்லிமாவின் 25 ஆண்டுகால சேவையைப் பாராட்டி, விருதுக்கான 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிழை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்.18) தலைமைச் செயலகத்தில் அவரிடம் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் த.ரத்னா, மாநில திட்டக் குழு உறுப்பினர் டாக்டர் நர்த்தகி நடராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

          
SCROLL FOR NEXT