திருச்செந்தூர் கோயிலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார். 
தமிழகம்

மீனவப் பெண்களின் வருவாய்க்காக தமிழகத்தில் கடல்பாசி வளர்க்கும் சிறப்பு பூங்கா - மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தமிழகத்தில் உள்ள மீனவ பெண்களின் வாழ்வாதாரத்துக்காக கடல்பாசி வளர்க்கும் சிறப்பு பூங்கா அமைக்கப்பட உள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு, பால்வளம், மீன் வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணைஅமைச்சர் எல்.முருகன் நேற்று திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீனவர்களின் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி அவர்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ரூ.20 ஆயிரம் கோடியில் முதலீடு செய்யப்பட உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் மீன் வளத்தை அதிகப்படுத்தும் வகையில் தரமான மீன் குஞ்சுகளை கடலில் கூண்டுக்குள் வளர்க்கும் திட்டம், பிரதான் மந்திரி மத்திய சம்படயோஜனா திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டில் குளிர்ப்பதனக் கிடங்கு அமைத்தல், மீன்பதப்படுத்தும் நிலையம் அமைத்தல், ஆழ்கடல் மீன் வளர்ப்புபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக மத்திய அரசு ரூ.1,500 வழங்குகிறது. மீனவர்களுக்கு குரூப் இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் திட்டங்களில் அதிக பயனாளிகள் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. நெடுஞ்சாலை மேம்பாடு, அனைவருக்கும் வீடு திட்டம், ஜல் ஜீவன் மிஷன், மருத்துவக் காப்பீடு, முத்ரா கடன் உதவி, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடனுதவி என அனைத்து திட்டங்களிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிக பயனாளிகளாக உள்ளனர்.

தமிழகத்தில் மீனவ பெண்களுக்காக கடல்பாசி வளர்ப்பதற்காக சிறப்பு மண்டலம் அமைப்பதற்கான இடம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். அவர்கள் தேர்வு செய்து அனுப்பிய பின்னர் அதற்கான பணிகள் தொடங்கும். பாரதியாரின் சிலை திறப்பு விழா மற்றும் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது பாரதியாரையும் சேர்த்து புறக்கணித்தது போன்றது ஆகும் என்றார்.

SCROLL FOR NEXT