சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி சந்தித்து, சென்னை தீவுத்திடலில் நடக்கவுள்ள நிவாச திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தார்.
சென்னை தீவுத்திடலில் வரும் 16-ம் தேதி மாலை 6 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நிவாச திருக்கல்யாண வைபவம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி நேற்று சந்தித்தார். அப்போது, திருக்கல்யாண வைபவ அழைப்பிதழை முதல்வரிடம் வழங்கி, அவருக்கு அழைப்பு விடுத்தார். பின்னர், தீவுத்திடலில் நடந்து வரும் பணிகளை சுப்பா ரெட்டி பார்வையிட்டார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை தீவுத்திடலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மாண்டமான முறையில் நிவாச திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இதற்காக, திருமலையில் இருந்து உற்சவர் கொண்டுவரப்படுவதுடன் திருமலைக் கோயில் பட்டாச்சாரியார்களும் வர உள்ளனர்.
இந்த வைபவத்துக்கான அழைப்பிதழை முதல்வரிடம் நேரில் வழங்கி நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி வேண்டுகோள் விடுத்தேன். மேலும், திருக்கல்யாணம் நடத்த தேவையான உதவிகளை அளிக்க உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்தேன்.
திருக்கல்யாண வைபவத்துக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள நாளை (இன்று) அறநிலையத் துறை, சுற்றுலாத் துறை சார்பில் அனைத்து துறை கூட்டம் நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருமலையில் திருக்கல்யாணத்தை தரிசிக்க முடியாதவர்கள் அனைவரும் ஒரேநேரத்தில் இதை கண்டு தரிசிக்கலாம். அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.