இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த சிறிய ரக கப்பலை, இந்தியகடலோர காவல் படையினர் பிடித்து, கப்பலில் இருந்த 11 பேரை சென்னை துறைமுகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய கடல் எல்லை பகுதியில் அந்தமானை ஒட்டியுள்ள இந்திரா பாயின்ட் என்ற கடல் பகுதியில் வெளிநாட்டு கப்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து இருப்பதை இந்திய கடலோர காவல் படையினர் கண்டுபிடித்தனர். உடனே, அந்த சிறிய ரக கப்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். இக் கப்பல் ஈரான் நாட்டைநாட்டைச் சேர்ந்தது என தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்களிடம் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர், விசாரணை நடத்தினர். மொத்தம் கப்பலுக்குள் 11 பேர் இருந்தனர். அவர்கள் சரியான பதிலை கூறவில்லை. உடனே அவர்களை கப்பலுடன் சேர்த்து சென்னை துறைமுகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
இதையொட்டி துறைமுகத்துக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாநில உளவுத் துறை, மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் துறைமுகத்துக்கு நேரில்வந்து 11 ஈரானியர்களிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் வந்த கப்பலையும் தீவிரமாக சோதனை செய்தனர். போதைப்பொருள் கடத்தலுக்காக வந்தார்களா என்றசந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
இவர்கள் மீனவர்களா, தீவிரவாதிகளா, போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.