நாகர்கோவில்: பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு ஆரல்வாய்மொழியில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பாஜக பிரச்சாரப் பிரிவு தலைவர் ஜெயபிரகாஷ் பேசும்போது, முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்பி ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதாக, வீடியோ ஆதாரத்துடன் திமுக மாவட்டப் பொருளாளர் கேட்சன் போலீஸில் புகார் அளித்தார்.
போலீஸார் விசாரணை நடத்திஜெயபிரகாஷ் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இரணியலில் உள்ள ஜெயபிரகாஷின் வீட்டுக்கு நேற்று அதிகாலை சென்று, அவரைக் கைது செய்ய போலீஸார் முயன்றனர். இத்தகவல் அறிந்ததும் பாஜக மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் ரமேஷ், கட்சி தொண்டர்கள் அங்கு திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், ஜெயபிரகாஷை கைது செய்து ஆரல்வாய்மொழி காவல் நிலையம் கொண்டு சென்றபோது அங்கும் பாஜகவினர் திரண்டு எதிர்ப்பு கோஷமிட்டனர்.