வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சமூக நலத்துறை மூலம் சர்வதேச திருநங்கைகள் தின விழா நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூன்றாம் பாலினத் தினர் சார்பில் சமையல், கோலம், பாடல், நடனம், ஆடை அலங்கார அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், வெற்றிபெற்றவர் களுக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பரிசுகள், சான்றி தழ்களை வழங்கிப் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 52 பேருக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், சமூக நலத்துறை சார்பில் ரூ.16 லட்சத்து 14 ஆயிரத்து 559 தொகையாக 33 பேருக்கு சிறுதொழில் மானியமாகவும், 45 பேருக்கு அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மகளிர் திட்ட அலுவலர் செந்தில்குமரன், சமூக நல அலுவலர் (பொறுப்பு) கோமதி, மாநகராட்சி கவுன்சிலர் கங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.