மதுரை: சொத்து வரி உயர்வை கண்டித்து வரும் 11-ம் தேதி அனைத்து மாநகராட்சிகளிலும் தேமுதிக சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"அனைத்து பொருட்கள் விலை வாசி உயர்வை கண்டித்து இன்று விருதுநகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிறது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினையை உணராமல் அரசாங்கம் மக்களின் வரியில் அரசாங்கத்தை நடத்த முயற்சிக்கின்றனர். விலைவாசி உயர்வையை திரும்பப் பெற வேண்டும்.
நீட் தேர்வை பொறுத்தவரை தமிழகத்தில் அனைவரின் கருத்தும் நீட் வேண்டாம் என்பதுதான். ஆளுநரிடம் பலமுறை தீர்மானம் நிறைவேற்றி கொடுக்கப்பட்டுள்ளது, ஆளுநர் டெல்லிக்கு கொடுக்கவில்லை என்கிறார்கள்.ஆளுங்கட்சி மக்களை குழப்பக் கூடாது. நீட் தேர்விற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதேசமயம் பெண்களும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பெண்களும் தங்களுடைய சுதந்திரத்தை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்களுக்கும் அந்த பொறுப்புணர்வு வேண்டும். அதே சமயம் அவர்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
முதல்வரின் துபாய் பயணம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது குடும்ப சுற்றுலா என்கிறார்கள், முதலீட்டை அதிகரிக்க சென்றதாக கூறுகிறார்கள் எதுவாக இருந்தாலும் தமிழகத்திற்கு நல்லது நடக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இது மக்களுக்கான பயணமா அல்லது அவர்களுக்கான பயணமா என்பது இன்னும் கொஞ்ச நாட்களில் தெரிந்துவிடும்.
சொத்து வரி உயர்வை கண்டித்து வருகிற 11ம் தேதி அனைத்து மாநகராட்சிகளிலும் தேமுதிக சார்பாக போராட்டம் நடைபெறவுள்ளது. 25% முதல் 50% வரை உயர்த்தலாம் ஆனால் 150% என்பது ஒட்டுமொத்த மக்களும் தாங்க முடியாத சுமை, ஏற்கனவே பல பிரச்சினைகள் உள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளது, இந்த விலைவாசி உயர்வை நிச்சயமாக அரசு மறுபரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்"
என்று பிரேமலாதா விஜய்காந்த் கூறினார்.