கோவை: கோவை வனக் கோட்டத்தில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 11 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில், இளம் யானைகள் உயிரிழப்பும் அடங்கும். இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டில்நிகழ்ந்த யானைகள் உயிரிழப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தரகுழு அமைத்து தமிழக வனத்துறைகடந்த 31-ம் தேதி உத்தரவிட்டது.
அந்த குழுவின் ஒருங்கிணைப் பாளராக கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஐ.அன்வர்தீன், உறுப்பினர்களாக ஐஎஃப்எஸ் அதிகாரிகள் பத்மா,சமர்த்தா, கோவையை சேர்ந்த ஓசை அமைப்பின் தலைவர் காளிதாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ள னர். இந்த குழுவினர் களத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும், யானைகள் உயிரிழப்புக்கான காரணிகளை தரவுகளுடன் அறிய வேண்டும், வருங்காலத்தில் இயற்கைக்கு மாறாக ஏற்படும் யானைகள் மரணங்களை தடுக்கும் வழிமுறைகளை வகுத்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்தில் அண்மையில் அவுட்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டை கடித்ததால்வாய்சிதறி இளம் யானை உயிரிழந்த இடத்தை ஐ.அன்வர்தீன் தலைமையிலான குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார், உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார், வனச்சரகர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.