புதுச்சேரி: புதுச்சேரியில் 2022-23ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூட்டப்பட்ட நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரியின் 15வது சட்டசபையின் கூட்டத்தொடர் கடந்த மாதம் 23ம் தேதி கூட்டப்பட்டது. அன்றைய தினம் பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவர்களது கூட்டணி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் அன்று ஒரே நாளில் அனைத்து அலுவல்களும் இயற்றபட்டு கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இம்மாதம் 30ம் தேதி இரண்டாம் கூட்டத்தொடர் கூட்டப்படும் என பேரவை தலைவர் செல்வம் அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 9.30 மணி அளவில் சட்டப்பேரவையில் மீண்டும் கூட்டப்பட்டது.
அப்போது முதல்வர் பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான சிவா மற்றும் காங்கிராஸ் கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி கோஷங்களை எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.
மேலும், சட்டப்பேரவை வளாகத்தில் ஒன்று திரண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினார். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.