தமிழகம்

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு: பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் கைது

செய்திப்பிரிவு

சென்னை: பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை மீரா மிதுனை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஆண்டு ஆகஸ்டில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரும் கேரளாவில் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தற்போது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதிஎஸ்.அல்லி முன்பு நடைபெற்று வருகிறது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீராமிதுன் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மீரா மிதுனை போலீஸார் நேற்று கைது செய்து முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதையடுத்து அவரை ஏப்.4 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT