சென்னை: சட்டப்பேரவையில் நேற்று தளி தொகுதி உறுப்பினர் டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) பேசும்போது, ‘‘ஓசூரில் 4-வது சிப்காட் தொழில் பூங்காவுக்கு நிலம் எடுக்கும் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய நிலங்களை விட்டுவிட்டு தரிசு நிலத்தை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கான நில வங்கி அமைக்க 45 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இந்த நில வங்கியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு உகந்த பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது.
தொழில் பூங்காவுக்காக நிலம் எடுக்கும்போது, விவசாயிகளிடம் இருந்துபறிக்கப்படுவது இல்லை. முதல்வர்அறிவுறுத்தலின்படி, நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் விருப்பப்படி எடுத்து வருகிறோம். தமிழகத்தின் தொழில் வளர்ச்சியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.