சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம் 
தமிழகம்

மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்கக் கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் கற்பகம் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு இலவச லேப் டாப்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2020-21 ஆம் கல்வியாண்டில் 5 லட்சத்து 32 ஆயிரம் லேப் டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியருக்கு லேப்டாப்கள் வழங்கப்படவில்லை.எனவே மாற்று திறனாளி மாணவ - மாணவியருக்கு இலவச லேப் டாப்கள் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறிய நீதிபதிகள், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக எச்சரித்தனர்.

இதையடுத்து மனுவை திரும்பப் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்று, மனுவை வாபஸ் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT