சிலை திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி. அருகில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ. படம்: ஜி.மூர்த்தி 
தமிழகம்

வருங்கால தமிழகத்தை உதயநிதி வழி நடத்துவார்: மதுரை விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி பேச்சு

செய்திப்பிரிவு

வருங்கால தமிழகத்தை உதயநிதி வழி நடத்துவார் என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை ஆனையூரில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ சிலையைத் திறந்து வைத்துப் பேசினார். இந்த விழாவில் தலைமை வகித்து அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது;

இந்த சிலையை நிறுவ அதிமுக எதிர்ப்பால் ஐந்து ஆண்டுகள் நீண்ட சட்டப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. சிலையை நிறுவவிடாமல் அதிமுகவினர் தடுத்தனர்.

முதல்வர் எங்களுக்கு அமைச்சர் பதவியை தந்தாலும் இந்த நிலைக்கு எங்களை உருவாக்கியவர் உதயநிதி ஸ்டாலின்தான். அவர் மதுரையில் தான் முதன்முறையாக அரசியல் மாநாட்டில் பங்கேற்று தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

அதேபோல் இந்த சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு இளைஞர்களையும், வருங்காலத் தமிழகத்தையும் அவர் வழிநடத்தப் போகிறார்.

முதல்வருக்கு உற்ற துணையாக அமைச்சர் பொறுப்பையும் விரைவில் ஏற்பார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

இவரைத் தொடர்ந்து அமைச் சர்கள் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மெய்யநாதன் பேசினர். நிகழ்ச்சியில் சிலை அமைக்க இலவசமாக இடம் வழங்கிய ஜி.செல்வகணபதி கவுரவிக்கப் பட்டார்.

மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.மணிமாறன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்கள் பொன் முத்துராமலிங்கலம், கோ.தளபதி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர்கள் ஜி.பி.ராஜா, பா.மதன்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT