சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில், ராம்கோ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சார்பில் ரூ.6 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நேற்று திறந்து வைத்தார்.
மாநகராட்சிப் பகுதிகளில் மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த, தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை மாநகராட்சி நிர்வாகம் கோரியுள்ளது.
அதன்படி, நீர்நிலைகளை தூர் வாரி அழகுபடுத்துதல், சாலைகளின் நடுவில் உள்ள திட்டுகளில் வர்ணம் தீட்டி அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, மக்கள் அதிகம் வந்து செல்லும் மாநகராட்சியின் தலைமையிடமான ரிப்பன் மாளிகை வளாகத்தில், ராம்கோ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியில் ரூ.6 லட்சம் செலவில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.
அதை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நேற்று திறந்துவைத்தார். ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ராம்கோ நிறுவன பொது மேலாளர் ஜானகிராமன், தரக் கட்டுப்பாட்டு மேலாளர் நேசன்ராஜ், மாநகராட்சி தலைமைப் பொறியாளர் காளிமுத்து மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.