கோடை காலம் தொடங்கியுள்ளதால் வன விலங்குகளுக்கு தாகம் தீர்க்க தொட்டிகளில் நீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை வனக்கோட்டத்தில் போளுவாம்பட்டி, மதுக்கரை, கோவை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை என 7 வனச்சரகங்கள் உள்ளன.
இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுமாடு, புள்ளிமான், யானைகள், புலி, கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் நீரோடைகளில் தண்ணீர் குறைந்துள்ளது.
இதனால், வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கவும், உணவு, குடிநீர் தேவைக்காக அவை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்கும் வகையிலும் வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் நீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார் கூறியதாவது: வனத்துறை அமைத்துள்ள தொட்டிகளை சுத்தம் செய்து, டேங்கர் லாரிகள் மூலம் நீர் நிரப்பப்பட்டு வருகிறது.
ஆழ்துளை கிணறுகள் உள்ள இடங்களில் அதன்மூலம் தேவையான நீர் பெறப்படுகிறது. கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத் தீயை குறைக்க வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களையே தீத் தடுப்பு பணியாளர்களாக தற்காலிகமாக நியமித்துள்ளோம். அவர்கள் கோடைகாலம் நிறைவடையும் வரை பணியாற்றுவார்கள். எத்தனை நாட்கள் அவர்கள் பணியாற்றுகிறார்களோ அதற்குரிய ஊதியம் வழங்கப்படும்.
இதுதவிர, எங்கேனும் காட்டுத்தீ ஏற்பட்டால் அதை அணைக்க உதவ வேண்டும் என உள்ளூர் மக்களிடம் தெரிவித்துள்ளோம். பெரியநாயக்கன்பாளையத்தில் நேற்று முன்தினம் பற்றிய காட்டுத்தீயை அணைக்க உள்ளூர் மக்கள் உதவினர். யானைகளுக்கு தேவைப்படும் உப்புக்கட்டியை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளோம். அவை வந்தவுடன் யானை நடமாட்டம் உள்ள இடங்கள், தண்ணீர் தொட்டிகள், நீர்நிலைகளுக்கு அருகே வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.