எம்ஜிஆர் நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை மேயர் பிரியா நேற்று தொடங்கிவைத்து மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கினார். உடன் துணை மேயர் மகேஷ்குமார், பிரபாகர் ராஜா எம்எல்ஏ மற்றும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி. படம்: ம.பிரபு 
தமிழகம்

குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை: மேயர் ஆர்.பிரியா வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மேயர் ஆர்.பிரியா வழங்கினார்.

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி சார்பில் கோடம்பாக்கம் மண்டலம் எம்ஜிஆர் நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமை மேயர்ஆர்.பிரியா தொடங்கிவைத்தார். முகாமில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகளை மேயர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்தியாவில் 6 முதல் 59 மாத குழந்தைகளில் 10-ல் 7 குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று 15 முதல் 19 வயதினரிடையே 56 சதவீத பெண்களும், 30 சதவீத ஆண்களும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் பேர் உடல் வளர்ச்சி குன்றியும், 43 சதவீதம் பேர் எடை குறைவாகவும் உள்ளனர்.

எனவே குழந்தைகள் மற்றும்பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில்ஒவ்வொரு ஆண்டும் தேசியகுடற்புழு நீக்க நாள் அறிவிக்கப்பட்டு, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஆரம்பசுகாதார நிலையங்கள் உட்படபல்வேறு இடங்களில் முகாம்கள்அமைக்கப்பட்டு 1 முதல் 19வயது வரையுள்ள 15 லட்சத்து 55 ஆயிரத்து 354 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுள்ள பெண்கள் 4 லட்சத்து 12 ஆயிரத்து 482 பேருக்கும் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்கள் 19-ம் தேதி வரை நடக்க உள்ளது. விடுபட்ட நபர்களுக்கு 21-ம் தேதி வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் மு.மகேஷ்குமார், ஏஎம்வி.பிரபாகர் ராஜா எம்எல்ஏ, மாநகராட்சி மேயர்ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள் எஸ்.மனீஷ், டி.சினேகா, எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT