திருச்சி: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம், 2012-ல் திருச்சியில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு, 2012-ல் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்கள்குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை. எனவே, சிபிஐ-க்கு மாற்றகோரி ராமஜெயம் மனைவி லதா 2014-ல் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார்.
பின்னர், இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றி 3 மாதத்துக்குள் விசாரணையை முடிக்குமாறு 2017-ல் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சிபிஐயாலும் குற்றவாளிகளை நெருங்க முடியவில்லை.
இந்நிலையில், இவ்வழக்கை மீண்டும் தமிழக போலீஸாரிடமே ஒப்படைக்கக் கோரி கே.என்.நேருவின் மற்றொரு சகோதரரான கே.என்.ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ராமஜெயம் கொலை வழக்கு குறித்த அடுத்தக்கட்ட விசாரணை நடத்த தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார், அரியலூர் டிஎஸ்பி மதன், ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வந்த சிபிஐ டிஎஸ்பி ஆர்.ரவி உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து, ராமஜெயம் கொலை வழக்கு குறித்த விசாரணையை இக்குழுவினர் தற்போது தொடங்கியுள்ளனர். சென்னையில்உள்ள சிபிஐ அலுவலகத்திலிருந்து, இவ்வழக்கு குறித்த ஆவணங்களைப் பெற்று ஆய்வு செய்த எஸ்.பி ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்து, மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயனிடம் ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து ராமஜெயத்தின் வீடு அமைந்துள்ள பகுதி, அவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் கோட்டை ஸ்டேஷன் சாலை, கொலை செய்யப்பட்டு கிடந்த திருவளர்ச்சோலை பகுதி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இக்குழுவினர் விசாரணை நடத்துவதற்கு வசதியாக திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டு வருகிறது. விசாரணையை பல்வேறு கோணங்களில் மேற்கொள்வதற்காக பிரதான குழுவின் கட்டுப்பாட்டின்கீழ், பல தனிப்படைகள் அமைக்கப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.