தமிழகம்

விவசாயிகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்துக்கு பாமக ஆதரவு: ராமதாஸ்

செய்திப்பிரிவு

வரும் 5-ம் தேதி விவசாயிகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்திற்கு பாமக ஆதரவு அளிக்கிறது என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''அரியலூர் மாவட்டத்தில் கடன் தவணையை திருப்பிச் செலுத்த தவறியதற்காக அவமானப்படுத்தப்பட்ட அழகர் என்ற விவசாயி அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.

அதேபோல் கடன்சுமையை தாங்க முடியாமல் தஞ்சை மாவட்டம் கொத்தங்குடியைச் சேர்ந்த தனசேகர், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ் ஆகிய விவசாயிகள் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டனர். அதற்கு முன்பாக தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த பாலன் என்ற விவசாயி கடன் தவணையை செலுத்தாததற்காக வங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் மிகக் கடுமையாக தாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டார்.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 423 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.விவசாயிகளின் தற்கொலைக்கு அவர்களின் கடன் சுமையும், விளைப்பொருட்களுக்கு போதிய லாபம் கிடைக்காததும் தான் காரணம்.

தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இந்த உண்மை நன்றாகத் தெரியும் என்ற போதிலும், அவற்றைக் களைவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடன் மீதான ஏலம், பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தேர்தல் வரை நிறுத்தி வைக்கும்படி ஆட்சியாளர்களிடமும், அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்தும் பயனில்லை என விவசாயிகள் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

ஆட்சியாளர்களின் இந்த போக்கைக் கண்டித்து வரும் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்திருக்கிறது. இதற்கு பாமக ஆதரவு அளிக்கிறது'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT