சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வாக்காளர்களின் புள்ளி விவரங்களை திரட்டி, திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சேப்பாக்கம்-திருவல்லிக் கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக ஜெ.அன்பழகன் போட்டியிடுகிறார். இவரைத் தவிர, அதிமுக வேட்பாளராக ஏ.நூர்ஜஹான், தேமுதிக வேட்பாளராக வெ.அப்துல்லாஹ் ஷேட், பாமக வேட்பாளராக ஏவிஏ கசாலி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதால் அதிமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் முஸ்லிம் சமூகத்தை சேர்ந் தவர்களையே வேட்பாளராக கள மிறக்கியுள்ளன. எனவே, போட்டியை எதிர்கொள்ள வாக்காளர்களின் விவரங்களை திரட்டி, திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் ஜெ.அன்பழகன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் போஸ்டர்கள், சுவர் விளம்பரம், கட் அவுட்கள் இடம்பெறக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாக்காளர்களை நேரடியாக சந்திப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
நடுநிலை வாக்காளர்களை கண்டறிய புள்ளிவிவர யுக்தியை கையாள்கிறோம். அவர்களை குறிவைத்து வாக்கு கேட்கிறோம்.
இந்த விவரங்கள் இல்லாமல், வெறுமனே தெருக்களை சுற்றி வந்து வாக்கு சேகரிப்பதால் எந்த பயனும் இல்லை என்றார்.