தமிழகம்

பெரியார் திடலில் சிறப்பு புத்தக கண்காட்சி: அனைத்து புத்தகங்களும் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை

செய்திப்பிரிவு

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் சிறப்பு புத்தகக் கண்காட்சியை தென்னிந்தியாவுக் கான ரஷ்ய தூதர் செர்ஜி கோட்டவ் நேற்று தொடங்கிவைத்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் அனைத்து புத்தகங்களும் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.

உலகப் புத்தக நாளை கொண்டாடுவதன் மூலம், இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதமாக கடந்த 2013-ம் ஆண்டுமுதல் பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம், “சென்னை புத்தகச் சங்கமம்” எனும் பெயரில் புத்தகக் கண்காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான மூன்று நாட்கள் சிறப்பு புத்தகக் கண்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது. வரியியல் வல்லுனர் ச.ராசரத்தினம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், புத்தகக் கண்காட்சியை தென்னிந்தியாவுக்கான ரஷ்ய தூதர் செர்ஜி கோட்டவ் தொடங்கிவைத்தார். பதிப்பாளர் காந்தி கண்ணதாசன், புத்தக விற்பனையைத் தொடங்கிவைத் தார். விழாவில், தி.க.தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயலாளருமான கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பெரியார் திடலில் உள்ள எம்.ஆர்.ராதா ஏ.சி. அரங்கத்தில் நாளை (ஏப்.24) வரை நடைபெறும் இப்புத்தக கண்காட்சியில் 30 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ‘தி இந்து’, கண்ணதாசன் பதிப்பகம், பெரியார் புத்தக நிலையம், காந்தளகம், ஏகம் பதிப்பகம், உயிர்மை பதிப்பகம், காலச்சுவடு பதிப்பகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உள்ளிட்ட முன்னணி பதிப்பகங்கள் அரங்குகள் அமைத்திருக்கின்றன. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் கண்காட்சியில் அனைத்து புத்தகங்களும் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்தாண்டு இறுதியில் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பதிப்பாளர்களுக்கும், வாசகர் களுக்கும் உதவிடும் வகையில் இந்தாண்டு முதன்முறையாக அனைத்து நூல்களும் 50 சதவீதம் தள்ளுபடியில் விற்கப் படுகின்றன. இலக்கியம், அறிவி யல், குழந்தைகளுக்கான நூல்கள், விளையாட்டு, பொருளாதாரம், பகுத்தறிவு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து துறைகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான தலைப்புகளில் முன்னணி பதிப்பகங்களின் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

          
SCROLL FOR NEXT