கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் முத்துலிங்கம்(34). பிரபல ரவுடியான இவர் மீது கடலூர், நெய்வேலி மற்றும் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பல திருட்டு வழக்குகள் இருந்தன. வளசரவாக்கத்தில் 35 பவுன் நகை திருடு போனது தொடர்பாக முத்துலிங்கத்தை சென்னை வடபழனி போலீஸார் கடந்த 2011-ல் சென்னையில் வைத்து கைது செய்தனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பியோட முயன்ற முத்துலிங்கத்தை போலீஸார் சரமாரியாக தாக்கியதால் அவர் இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட 16-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் வடபழனி காவல் ஆய்வாளர் நடேசன், சார்பு ஆய்வாளர் மூர்த்தி, தலைமைக் காவலர் முருகேசன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், எஸ்.நாகமுத்து ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், போலீஸ் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.