எலவனாசூர்கோட்டை அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தின் போது தேர் சாய்ந்து விழுந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் தனியார் பராமரிப்பில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மார்ச் 1-ம் தேதி மாசி மகத் திருவிழா தொடங்கியது. கடந்த 2-ம் தேதி மயானகொள்ளை நிகழ்ச்சி நடந்தது. நேற்று 8-ம் நாள் உற்சவத்தையொட்டி தேரோட்டம் நடந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். எலவனாசூர்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்த போது திடீரென தேர் சக்கரம் சேதமடைந்துள்ளது. இதனால் தேர் சாய்ந்து சாலையில் விழுந்தது. தேரில் இருந்த பூசாரிக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரின், போலீஸார் தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்குச் சென்று கீழே விழுந்த தேரை, பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு மீட்டு கோயிலுக்கு கொண்டு சென்றனர்.