தமிழகம்

தேர்தல் நாளில் விளம்பரங்கள் - திமுக, பாஜகவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம் விதித்தது ஐகோர்ட்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தேர்தல் விதிகளை மீறி பத்திரிகை, ஊடகங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்ததாக திமுக, பாஜக கட்சிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல் ரவி தொடர்ந்த வழக்கில், ’எங்களது கட்சி நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டுமென, மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அரசியல் கட்சிகள், மாநில தேர்தல் ஆணையத்திடம் ஊடகங்கள், பத்திரிகை, மற்றும் ரேடியோவில் விளம்பரம் செய்ய அனுமதி பெற வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்கு பிறகே அரசயில் கட்சிகள் விளம்பரங்களை வெளியிட முடியும். இந்நிலையில், தேர்தல் நாளன்று திமுக மற்றும் பாஜக தேர்தல் விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக பத்திரிகைகளில் விளம்பரங்கள் செய்துள்ளன. எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்ட திமுக ,பாஜக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதுவரை மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ’பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய கட்சிகளுக்கு எந்த தடையும் கிடையாது’ என கருத்து தெரிவித்தனர்.

சட்ட நுணுக்கங்களை ஆராயமல் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT