காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: சிவாலயங்களில் மஹா சிவராத்திரி விழாவில் விடிய, விடிய நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் மஹா சிவராத்திரி விழா நேற்று இரவு தொடங்கி, இன்று அதிகாலை வரை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர், திருத்தணி வீரட்டீஸ்வரர், திருவேற்காடு வேதபுரீஸ்வரர், திருநின்றவூர் இருதயாலீஸ்வரர், பூண்டி ஊன்றீஸ்வரர், திருப்பாச்சூர் வாசீசுவர சுவாமி, திருமழிசை ஒத்தாண்டீஸ்வரர், பஞ்செட்டி அகத்தீஸ்வரர், ஞாயிறு புஷ்பரதீஸ்வரர், திருப்பாலைவனம் திருபாலீஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் மஹா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சிவாலயங்கள் மின் விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு 4 கால பூஜைகள் விடிய, விடிய நடைபெற்றன. இந்த பூஜைகளில், பால், இளநீர், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், திருநீறு உள்ளிட்ட பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. தூப தீப ஆராதனைகளும், தேவார இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில், பரதநாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் மஹா சிவராத்தியை ஒட்டி சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன.
மலர் அலங்காரத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், 108 சங்காபிஷேகம், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதேபோல், ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், முத்தீஸ்வரர், வழக்கறுத்தீஸ்வரர், வன்மீகநாதர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக் கோயிலில் மஹா சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும், மலர் அலங்காரத்தில் திரிபுரசுந்தரி அம்பாளுடன், உற்சவர் வேதகிரீஸ்வரர் வீதியுலா நடைபெற்றது.
இதேபோல், ருத்திரகோட்டிஸ்வரர், தீர்த்தகிரீஸ்வரர், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர், பசுபதீஸ்வரர், திருப்போரூர் செங்கண்மாலீஸ்வரர், திருக்கச்சூர் மருந்தீஸ்வரர், திருக்காலிமேடு சத்யநாதஸ்வாமி உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.