திருப்பூர்: 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஊத்துக்குளி வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஊத்துக்குளி காவல் எல்லைக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை, கடந்த 2020-ம் ஆண்டு அக்.18-ம் தேதி, ரபி நிஷிகா (28) என்பவர் அதே பகுதியில் உள்ள விஜய்பூரி என்பவரின் வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன் பேரில் காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி ரபி நிஷிகாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு, திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி வி.பி.சுகந்தி, இந்த வழக்கில் அளித்த தீர்ப்பில், ரபி நிஷிகாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து ரபி நிஷிகாவை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் ஜமிலா பானு ஆஜரானார்.