வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இருதய பரிசோதனை நடத்தப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் அவருக்கான மருத்துவப் பரிசோதனைகள் சிறையில் உள்ள மருத்துவமனையில் நடத்தப்படும்.
இதற்கிடையில், தனக்கு இருதய பரிசோதனை நடத்த வேண்டும் என பேரறிவாளன் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். அதன்படி, வேலூர் மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் பேரறிவாளனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு இருதயத்தின் செயல்பாடுகளை கண்டறியும் எக்கோ பரிசோதனை நடத்தப்பட்டது. சுமார் பத்து நிமிடங்களில் மருத்துவ பரிசோதனை முடிந்ததால் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் வேலூர் சிறையில் பேரறிவாளன் அடைக்கப்பட்டார்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரிக்கு பேரறிவாளன் சென்றுள்ளதாக’ சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.