தமிழகம்

தமிழகம் முழுவதும் அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் பெரும்பாலான சேவைகள் மற்றும்சமூகநலத் திட்ட பயன்களைப் பெறுவதற்கும், கல்விச் சான்று பெறுதல், பத்திரப் பதிவுகள்உள்ளிட்ட அனைத்திலும் ஆதார் எண் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு அரசுஇ-சேவை மையங்களில் ஆதார்பதிவு மையம் செயல்படுகிறது.

அதேபோல், தமிழகத்தில் 1,400-க்கும் மேற்பட்ட அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் அவ்வப்போது சிறப்பு முகாம் களும் நடத்தப்படுகின்றன.

அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த வாரம் முகாம்களை நடத்த அஞ்சல் அலுவலகங்கள் திட்டமிட்டுள்ளன. சென்னையில் புரசைவாக்கம் பிரிக்லின் சாலையில் உள்ள அரிஹந்த் வைகுந்த் அடுக்குமாடி குடியிருப்பு, ராயபுரம் கல்லறை சாலையில் உள்ள டான்போஸ்கோ அன்பு இல்லம் ஆகிய இடங்களில் இன்றும், பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இன்றும், நாளையும் முகாம்கள் நடைபெற உள்ளன.

இதேபோல், தமிழகம் முழுவதும் அந்தந்த அஞ்சலகங்கள் சார்பில் இடம் மற்றும் தேதியைமுடிவு செய்து அதிக எண்ணிக்கையில் முகாம்களை நடத்த அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அஞ்சலக தலைமை அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT