நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகப்பட்டினத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
நாகை கீச்சாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நேற்று முன்தினம் காலை நாகை துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் மாலை அவர்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை கீச்சாங்குப்பம் சேவா பாரதியைச் சேர்ந்த சின்னதுரை(60), அதே பகுதியைச் சேர்ந்த சிவபாரதி(27), சௌந்தர்ராஜன்(34), நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த பிரகாஷ்(35), அதே பகுதியைச் சேர்ந்த செல்வம்(45), அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் செல்வநாதன்(29), ரெத்தினசாமி(34), சந்திரபாடியைச் சேர்ந்த அய்யப்பன்(40), முருகேசன்(55) ஆகிய 9 மீனவர்களை படகுடன் கைது செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மீனவர்களுக்கு முதல் கட்டமாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் மீனவர்கள் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள். அதே போல் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து சென்ற 13 மீனவர்கள் என மொத்தம் 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.