கரூர் கோட்டைமேடுமாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடிக்குள் வாக்கு சேகரித்தவரிடம் கரூர் நகர இன்ஸ்பெக்டர்செந்தூர்பாண்டியன் விசாரணை நடத்துகிறார். 
தமிழகம்

கரூர்: வாக்குச்சாவடிக்குள் வாக்கு சேகரித்த நபர் மீது நடவடிக்கை

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாநகராட்சியில் வாக்குச்சாவடிக்குள் வாக்கு சேகரித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கரூர் மாநகராட்சி 7-வது வார்டில் அதிமுக சார்பில் லட்சுமி உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான வாக்குப்பதிவு கோட்டைமேடு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இங்குள்ள வாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் ஆய்வு நடத்தியபோது, வாக்குச்சாவடியினுள் ஒருவர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.

இதனைக் கண்ட ஆட்சியர் அவர் யாரென விசாரித்தார். வாக்குச்சாவடி முகவர் எனக் கூறிய அந்த நபர் காட்டிய ஆவணம் தவறாக இருந்தது. இதையடுத்து அவரை மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.

அவர் 7-வது வார்டு அதிமுக வேட்பாளர் லட்சுமியின் வாக்குச்சாவடி முகவர் சீனிவாசன் என்றும், மேலும் தனக்கு அந்த வாக்குச்சாவடியில்தான் வாக்கு உளளதென்றும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய கரூர் நகர இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன், அவரை கரூர் மாநகராட்சி தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ரவிச்சந்திரனை சந்திக்க உத்தரவிட்டார்.

இதுகுறித்து கரூர் மாநகராட்சி தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான என்.ரவிச்சந்திரனை கேட்டபோது, ''இதுகுறித்து மண்டல அலுவலரிடம் புகார் கேட்கப்பட்டுள்ளது. புகாரை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

SCROLL FOR NEXT