திருநகர் பாஜக வேட்பாளர் திருநங்கை சுஜாதா என்ற ஹர்சினியை ஆதரித்து பிரச்சாரம் செய்த மாநகர் மாவட்ட பாஜக தலைவர் பா.சரவணன். 
தமிழகம்

பாஜக வென்றால் இலவச மொபைல் போன்: மதுரை மாவட்ட தலைவர் சரவணன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் பா.சரவணன் பேசியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், கல்லூரி மாணவர்கள் கல்விக் கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி, மகப்பேறு உதவித் தொகை அதிகரிப்பு என ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இந்த வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை. இதற்கு மாறாக பொதுமக்களுக்கு தரமற்ற பொங்கல் பரிசுகளை வழங்கியுள்ளனர். இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மதுரைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் அளித்தது. மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச சமையல் கேஸ், இலவச வீடு, பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்புத் திட்டம், இலவச மருத்துவக் காப்பீடு எனப் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது.

மதுரை மக்கள் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் வீடுதோறும் இலவச ஆன்ட்ராய்டு மொபைல் போன் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT