தமிழகம்

ரூ.3 கோடி மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை

இ.மணிகண்டன்

விருதுநகர்: ரூ.3 கோடி மோசடி வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வந்துள்ள முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று விசாரணைக்காக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் 2-வது முறையாக ஆஜரானார்.

ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த ஜனவரி 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வெளியே வந்தார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி எப்பொழுது விசாரணைக்கு அழைத்தாலும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக கே.டி.ராஜேந்திர பாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடிதம் தாக்கல் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து, கே.டி.ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த சனிக்கிழமை விசாரணைக்காக ஆஜரானார். அப்போது தொடர்ந்து சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது .

இந்த நிலையில், இரண்டாவது முறையாக கே.டி.ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்கள் குறித்தும், ஆதாரங்கள் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன், இன்ஸ்பெக்டர் கணேஸ்தாஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT