கரூர்: கரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நேற்று பிரச்சாரம் செய்தார்.
பழையஜெயங்கொண்டம் பேரூராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பத்மா, கோபிநாத், மஞ்சு, தீபா, குருபிரசாத் ஆகியோரை ஆதரித்து பழைய ஜெயங்கொண்டத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். கடைத்தெருவில் வாக்கு சேகரித்த சுதாகர் ரெட்டி, அங்குள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா தயாரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, கரூர் மாநகராட்சி 35-வது வார்டில் போட்டியிடும் சியாமளா, 34 வார்டு வேட்பாளர் மலர்விழி, 45-வது வார்டு ரவி ஆகியோரை ஆதரித்து வீதி, வீதியாக சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது, கட்சியின் மாநில தேர்தல் பார்வையாளர் அமர்பிரசாத் ரெட்டி உடனிருந்தார்.