சென்னை: தமிழகம் முழுவதும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள வக்ஃப் வாரிய சொத்துகளுக்கு தடையில்லா சான்று வழங்கி மோசடி செய்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட வக்ஃப் வாரியஅதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வக்ஃப் வாரிய பாதுகாப்புக் குழு அறக்கட்டளை தலைவரான மதுரை கட்ராபாளையத்தைச் சேர்ந்த எம்.அஜ்மல்கான், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘சட்டரீதியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள எங்களது வக்ஃப்வாரிய பாதுகாப்பு குழு மூலமாகவக்ஃப் வாரிய சொத்துகளைப் பாதுகாக்கவும், மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மதரீதியிலான இறைபணிகளுக்காகவும், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஏழை, எளியமக்களுக்கு உதவும் நோக்கிலும் வக்ஃப் வாரியம் உருவாக்கப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் கொடையாக பெறப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
வக்ஃப் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற முதன்மை செயல் அதிகாரிகள் ரசீத்அலி மற்றும் கண்காணிப்பாளராக பணிபுரியும் அன்வர்தீன், முன்பு வக்பு வாரியத்தில்தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து தற்போது ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் முகமது அஸ்லம், வக்ஃப் வாரிய கண்காணிப்பாளர்கள் லியாகத் அலி, முகமது தலாத், ஓய்வுபெற்ற கண்காணிப்பாளர் நூருல்லா, ஆய்வாளர் அப்துல்லா, இளநிலை உதவியாளர் முகமது ஆலிம் உள்ளிட்ட பலர் பல்வேறு காலகட்டங்களில் இதர ஊழியர்களுடன் கூட்டணி அமைத்து தமிழகம் முழுவதும்சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள வக்ஃப் வாரிய சொத்துகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கி தனிநபர்களுக்கு விற்பனை செய்ய உடந்தையாக செயல்பட்டுள்ளனர். இதில் சிலர் இடைநீக்கமும் செய் யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கடலூர், கள்ளக்குறிச்சி, செஞ்சி, வேலூர் போன்றஇடங்களில் வக்ஃப் வாரிய சொத்துகள் தனிநபர்களுக்கு உரிமை மாற்றம் செய்தது கண்டறியப்பட்டும், அதுதொடர்பாக சட்டரீதியாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் முறைகேடு செய்துள்ளனர். எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வக்ஃப் வாரிய சொத்துகளை மீட்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.என். கிருபானந்தம் ஆஜராகி இந்தமுறைகேடுகள் குறித்து வாதிட்டார்.அதையடுத்து நீதிபதி, மனுதாரரின் மனு மீது தமிழக அரசு 6 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக தமிழக பிற்பட்டோர் மற்றும்சிறுபான்மையினர் நலத் துறை அரசு முதன்மை செயலர் ஏ.கார்த்திக், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைமை செயல் அதிகாரிக்கு தற்போது பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வக்ஃப் வாரிய இந்நாள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் மற்றும்ஊழியர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்து, முறைகேடாக உரிமம் மாற்றம் செய்யப்பட்ட வக்ஃப் வாரிய சொத்துகளை மீட்பது குறித்து 30 நாட்களுக்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும்’’ என உத்தரவிட் டுள்ளார்.