திருப்பூர்: கூலி உயர்வு பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தி, தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக விசைத்தறியாளர்கள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் ஜன. 9-ம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்லடம் ரகத்துக்கு 15 சதவீதம், சோமனூர் ரகத்துக்கு 19 சதவீதம் என கூலி உயர்வு தருவதாகவும், 4 மாதங்கள் கழித்து மீண்டும் கூலி உயர்வு வழங்கப்படும் என இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் இதற்கான ஒப்பந்தத்தில், ஜவுளி உற்பத்தியாளர்கள் கையெழுத்திட மறுத்ததால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதனிடையே, தனியார் ஸ்ரீ கருணாம்பிகை விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் முத்துசாமி தலைமை நடைபெற்ற கூட்டத்தில், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் புறக்கணித்த ஜவுளி உற்பத்தியாளர்களைக் கண்டித்தும், கையெழுத்திடும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்வது, கூட்டுக் கமிட்டி முடிவின்படி, தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.