சிதம்பரம் தெற்கு வீதியில் பிரச்சாரம் செய்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். 
தமிழகம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பழனிசாமி சொல்வது போல நான் ஓடி ஒளியவில்லை: சிதம்பரம் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

செய்திப்பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சிதம்பரம் நகராட்சியில் நேற்று மாலை திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

நான், ‘தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஓடி ஒளிந்து கொண்டேன்’ என்று பழனிசாமி கூறி வருகிறார். கடந்த 3 நாட்களாக நான் மக்களை சந்தித்து வருகிறேன். நான் ஒன்றும் ஓடி ஒளியவில்லை.

திமுக ஆட்சி ஏற்றவுடன் வாக்குறுதி கொடுத்தபடி, கரோனா நிதியாக ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, கூட்டுறவுகடன் தள்ளுபடி, இல்லம் தேடி கல்வித் திட்டம், மக்களை தேடிமருத்துவம், விபத்தில் உயிர் காக்கும் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என போராடினார்கள். அவர்களிடம் நான் வாக்குறுதி கொடுத்ததின் பேரில், தற்போது அரசு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிதம்பரம் - அண்ணாமலை நகர் பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூ. 127 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் அதிமுக ஆட்சியில் ஆக்கிரமிப்பு என அகற்றப்பட்ட வீடுகளுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

‘இந்துக்களின் விரோதக் கட்சி திமுக’ என கூறி வந்தனர். ஆனால், திமுக ஆட்சி ஏற்ற பிறகு தான் அதிக கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல்காந்தி, ‘திமுக இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது’ என்று கூறியுள்ளார். இதிலிருந்து பாஜகவிற்கு திமுக சிம்ம சொப்பனமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.

உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங் கப்பட்டுள்ளது. திமுகவின் சாதனை களை பெண்கள் வீடுவீடாகச் சென்று கூற வேண்டும். உள்ளாட்சியில் நல்லாட்சி மலர அனைவரும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

உதயநிதி ஸ்டாலின் பிரச் சாரத்தின் போது, சிதம்பரம் தெற்கு வீதியில் மேடை அமைக்கப்பட்டு சிதம்பரம் நகராட்சியின் 33 வார்டுகளிலும் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக்கட்சி வேட் பாளர்கள் நின்றிருந்தனர். அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், எம்எல்ஏ சபா ராஜேந்திரன், முன்னான் எம்எல்ஏசரவணன் மற்றும் திமுக, கூட்ட ணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் கடலூர் மாநக ராட்சியில் 3 இடங்களில் திறந்த வெளி வேன் மூலம் உதயநிதி பிரச்சாரம் செய்தார். கடலூர் பிரச்சாரத்தில் தொகுதி திமுக எம்எல்ஏ கோ.ஐயப்பன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT