தமிழகம்

தஞ்சை: வாய்ப்பு மறுத்த திமுக - சுயேட்சையாக 3 வார்டுகளில் போட்டியிடும் முன்னாள் கவுன்சிலர் குடும்பம்

வி.சுந்தர்ராஜ்

தஞ்சை: தஞ்சை மாநகராட்சித் தேர்தலில் முன்னாள் கவுன்சிலருக்கு மீண்டும் போட்டியிட திமுக தரப்பில் வாய்ப்பு தர மறுக்கப்பட்டதால், தனது மனைவி மகனுடன் இணைந்து 3 வார்டுகளில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுவினை இன்று தாக்கல் செய்துள்ளனர்.

தஞ்சை வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (54), இவர் கடந்த 2006–2011ம் ஆண்டில் தஞ்சை நகராட்சியாக இருந்தபோது, 44வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலரானார். இம்முறை மாநகராட்சியாக தர உயர்த்தப்பட்ட நிலையில், 44 வது வார்டாக இருந்த பகுதி, தற்போது 32, 33, 34 என மூன்று வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செல்வகுமார் திமுக சார்பில், 33வது வார்டில் போட்டியிட, மாவட்ட பொறுப்பாளர்களிடம் சீட் கேட்டுள்ளார். ஆனால், திமுகவினர் அவருக்கு சீட் வழங்க மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஏற்கெனவே 44வது வார்டிலிருந்து வெற்றிப் பெற்ற நிலையில், இன்று 32வது வார்டில் செல்வகுமாரும், 33வது வார்டில் அவரது மனைவி வனிதா(52), 34வது வார்டில் அவரது மகன் சக்கரவர்த்தி (30) ஆகிய மூவரும் சுயேச்சையாக போட்டியிட மாநகராட்சி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இது குறித்து செல்வகுமார் கூறுகையில், "தஞ்சை நகராட்சியாக இருந்த காலத்தில், கடந்த 1958ம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 முறை, அப்போதையே 27வது வார்டில் கவுன்சிலராக வெற்றி பெற்றவர் எனது தந்தை சீனிவாசன். மறைந்த முதல்வர் கருணாநிதியிடம் நெருக்கமான நட்புக்கொண்டவர். 1962ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், தஞ்சையில் அதிக வாக்குபெற்று கொடுத்தால், எனது தந்தைக்கு கருணாநிதி மோதிரம் அணிவித்தார்.

அதன்பிறகு தந்தையின் மறைவுக்கு பிறகு கடந்த 2000ம் ஆண்டு திமுகவில் கவுன்சிலராக போட்டியிட நான் சீட் கேட்டபோது மறுத்து விட்டனர். அதன் பிறகு சுயச்சையாக தென்னை மரம் சின்னத்தில், போட்டியிட்டு 11 வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவிடம் தோற்றேன். ஆனால், என்னைவிட திமுக 18 வாக்கு வித்தியாசத்தில் தோற்றது. இம்முறை சீட் கேட்டநிலையில் மறுக்கப்பட்டதால், சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்து வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே நின்ற தென்னை மர சின்னத்தை கேட்டுள்ளேன்" என செல்வகுமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT