பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரியில் 500-க்கும் கீழாக குறைந்தது தினசரி கரோனா பாதிப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 499 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கரோனா பாதிக்கப்பட்ட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று (பிப். 3) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புதுச்சேரி மாநிலத்தில் 3,082 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 286 பேர், காரைக்காலில் 159 பேர், ஏனாமில் 53 பேர், மாஹேவில் ஒருவருக்கு என மொத்தம் 499 (16.19 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த தொற்று பாதிப்பு 1 லட்சத்து 63 ஆயிரத்து 132 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகளில் 134 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 6,504 பேரும் என மொத்தமாக 6,638 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் புதுச்சேரி தில்லை மேஸ்திரி வீதியைச் சேர்ந்த 82 வயது முதியவர், சுதானா நகர் 60 வயது மூதாட்டி ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தனர்களின் எண்ணிக்கை 1,943 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. புதிதாக 711 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 551ஆக உள்ளது.

இதுவரை சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என 15 லட்சத்து 38 ஆயிரத்து 801 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, புதுச்சேரியில் கடந்த மாதம் 20-ம் தேதி புதிய உச்சமாக ஒரே நாளில் 2,783 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அது சில தினங்கள் அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதன்படி இப்போது தினசரி பாதிப்பு 500-க்கும் கீழ் குறைந்துள்ளது. தொற்று எண்ணிக்கையை மேலும் குறைக்க பொதுமக்கள் கரோனா விதிமுறைகளை கட்டாயம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமென சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT