புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது. மதிய உணவுக்கு மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்து தட்டு, டம்ளர் கொண்டு வர கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரை கடந்த மாதம்10 ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டது. 10ம் வகுப்பு முதல் கல்லுாரிகள் வரை கடந்த மாதம்18ம் தேதியிலிருந்து மூடப்பட்டன. பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், கரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால் பள்ளி, கல்லுாரிகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்தது. இதன்படி புதுவை, காரைக்காலில் 1ம் வகுப்பு முதல் பள்ளிகள், கல்லுாரிகள் நாளை முதல் திறக்கப்பட்டு வாரத்தில் 6 நாட்களும் செயல்படும் என கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.
இதையடுத்து, பள்ளிகளில் வகுப்பறைகளை தயார்செய்யும் பணியில் ஊழியர்கள் இன்று ஈடுபட்டனர். வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித் துறை இயக்குநர் ருத்ரகவுடு அறிவித்துள்ளார். அதன் விவரம்:
”கரோனா விதிமுறைகளை பின்பற்ற போதிய வகுப்பறைகள் இல்லாத சூழலில் 1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்தலாம். 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள்தோறும் வகுப்புகள் நடத்த வேண்டும்.
போதிய இடைவெளி நேரத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்கள், பள்ளி ஊழியர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பள்ளிக்கு வரும்போது வெப்ப பரிசோதனை நடத்த வேண்டும்.
காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும். தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வருகை பதிவேடு கட்டாயமில்லை. பள்ளிக்கு வர முடியாத மாணவர்களுக்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்.
பள்ளிகளில் இறை வணக்கம், கூட்டமாக கூடுவது, கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. பள்ளி வாகனங்களை கட்டுப்பாடுகளுடன் இயக்க வேண்டும். வாகனங்களை நாள்தோறும் சுத்தப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு மதிய உணவு, பால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை வழங்குவோர் கையுறை அணிந்து சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தட்டு, டம்ளர் கொண்டுவர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.