சென்னை: தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடக்கோரிய வழக்கை, தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, இரண்டு ஆண்டுகள் வழக்கு தொடர தடையும் விதித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் அதிகரித்து வருகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சான்றிதழ்களும் பெற லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. அனைத்து அலுவலகங்களிலும் லஞ்சம் வழங்கக் கூடாது என்ற அறிவிப்பு பலகை கட்டாயம் வைக்க வேண்டும். அனைத்து அலுவலங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி உயர் அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,மனுதாரர் எந்த ஆதாரமும் இல்லாமல், விளம்பரத்திற்காக மட்டுமே இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர் விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து,
அடுத்த 2 ஆண்டுகளுக்கு எந்த பொதுநல வழக்கும் தொடரக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.