தமிழகம்

ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் மீதான வழக்கு விசாரணைக்கான இடைக்காலத் தடை நீட்டிப்பு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி., ஆகியோர் மீதான வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் தங்களின் வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்தும், தவறான தகவல்களையும் தெரிவித்திருந்ததாகக் கூறி, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தேனி மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி மிலானி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி. மீதான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பிப்ரவரி 7-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், காவல் துறை பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்கு இன்றுவரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. அதேபோல புகார்தாரரான மிலானி தரப்பில், வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதுடன், இதுதொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல்களை இணைத்து பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு விசாரணையை பிப்ரவரி 21-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை, இந்த மனுக்கள் மீது தீர்ப்பளிக்கும் வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT