சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளில் பார்கள் அமைப்பதற்கான டெண்டரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழகம் முழுவதும், டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் , உணவுப் பொருள்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
கரோனா ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால், புதிய டெண்டருக்கு பதிலாக பழைய டெண்டர் நீட்டிக்க வேண்டும், நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றை கட்டாயப்படுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, டெண்டர் படிவங்கள் பெறுவதற்கு யாரையும் தடுக்கவில்லை. விண்ணப்பம் வாங்க விடாமல் தடுக்கப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை. இதுவரை 13 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப் பட்டதாகவும் தெரிவித்தார்.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ் கரோனா காலத்தில் பார்கள் மூடப்பட்டதால், தங்களுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும், கட்டிட உரிமையாளர்களின் ஆட்சேபனையில்லா சான்று தேவையில்லை என கூறிவிட்டு, தற்போது வாடகை ஒப்பந்தங்கள் கேட்கப்படுவதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக டெண்டர் நடைமுறைகள் நிறுத்தப்பட்ட 8 மாவட்டங்களை பொறுத்தவரை புதிய டெண்டர் கோரக்கூடாது என உத்தரவிட வேண்டும்.
ஒரு அதிகாரியை நியமித்து டெண்டர்களை திறக்க வேண்டும். அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சரவணன், அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.