பள்ளி மாணவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களைப் பெறலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணை விவரம்:
பள்ளிக்கல்வித் துறையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உட்பட அனைத்து வகையான ஆவணங்களையும் அரசு பொது சேவை மையங்கள் (இ-சேவை) மூலம் விண்ணப்பித்து, விரைவாகப் பெற்றுக் கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.
1 முதல் 12-ம் வகுப்பு வரையான கல்வி இணைச் சான்று, பிற மாநிலங்கள் மற்றும் திறந்தவெளி மையங்களில் படித்ததற்கான கல்வி இணைச் சான்றுகள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று, உண்மைத்தன்மைச் சான்று, புலப்பெயர் சான்று, பள்ளி மாற்றுச் சான்று, மதிப்பெண் சான்றிதழ், விளையாட்டு முன்னுரிமை சான்று மற்றும் சான்றிதழ்களில் திருத்தம் உட்பட 23 வகையான ஆவணங்கள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் வழங்கப்படுகின்றன.
பொதுமக்களின் நேரம், செலவைத் தவிர்க்கவும், அரசு அலுவலகங்களின் பணிச்சுமையைக் குறைக்கவும் இ-சேவை மையங்கள் மூலமாக மேற்கண்ட சான்றிதழ்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் பரிந்துரை செய்துள்ளார்.
இந்தப் பரிந்துரையை ஏற்று, இதற் கான அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் இணையவழியில் செயல்படுத்தவும் அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாணை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.