கரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ‘காவேரி கூக்குரல்' இயக்கம் 2 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் நடவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ‘காவேரி கூக்குரல்' இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் ‘காவேரி கூக்குரல்' இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, கடந்த 2019-ம் ஆண்டுதொடங்கி வைத்தார்.
‘காவேரி கூக்குரல்' இயக்கத்தின் களப் பணியாளர்கள் கிராமம் கிராமமாகச் சென்று விவசாயிகளை சந்தித்து மரக்கன்றுகள் நடுவதன்பயன்கள் குறித்து வலியுறுத்துகின்றனர். நிலங்களின் மண் மற்றும்தண்ணீரின் தன்மையை ஆய்வுசெய்து, மண்ணுக்கேற்ற மரங்களை நட பரிந்துரைக்கின்றனர்.
காரோனா பெருந்தொற்றுகாலத்திலும் ‘காவேரி கூக்குரல்' இயக்கத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம் மற்றும்கர்நாடகாவில் 2 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர். அத்துடன், சுமார் 1.25 லட்சம் விவசாயிகள் மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாறியுள்ளனர்.
இயற்கை முறையில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்வதற்காக 32 நர்சரிகள் செயல்படுகின்றன. தவிர, விவசாயிகளிடம் இருந்தேமரக்கன்றுகளை நேரடியாக கொள்முதல் செய்யும் விதமாக அவர்களுக்கு நர்சரி தொடங்குவதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தை சமூக வலைதளங்கள் மூலமாக விவசாயிகள், பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது.இதில், சுமார் 20 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுப்பட்டுள்ளனர். 128விவசாய வாட்ஸ்அப் குழுக்கள்செயல்படுகின்றன. மாதந்தோறும்4 லட்சம் விவசாயிகள் சமூக வலைதளங்கள் மூலம் இத்திட்டம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்கின்றனர்.
விவசாயிகளை நேரில் சந்தித்து பேசுவதற்காக 890 கிராமப்புற இளைஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். முக்கிய தினங்களில் ‘காவேரி கூக்குரல்’ இயக்கம் மூலமாக ஒவ்வொரு முறையும் தலா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில்நடவு செய்துள்ளனர்.
‘காவேரி கூக்குரல்’ உட்பட ஈஷாவின் பல்வேறு சுற்றுச்சூழல் திட்டங்கள் மூலமாக இதுவரை ஒட்டுமொத்தமாக 6.2 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றார்.இந்நிகழ்வின்போது, விவசாயிகள் வள்ளுவன், வாஞ்சி முத்து ஆகியோர் உடனிருந்தனர்.