சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி பாஜக முக்கிய நிர்வாகிகள் இரண்டாவது நாளாக ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக உடனான கூட்டணி மற்றும் இடப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது. அதிகப்படியான வார்டுகளை கேட்டுப் பெறவும், பாஜக பலமாக உள்ள கோவை மற்றும் கன்னியாகுமரியில் அதிகமான இடங்களை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதிகப்படியான வார்டுகளை பெற்றால்தான் தலைவர், துணை தலைவர் பதவிகளை கைப்பற்ற முடியும் என்பதால், அதிகமான வார்டுகளை கேட்டுப் பெற மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகக்கூடிய சூழலில் இன்றைய தினம் இரண்டாவது நாளாக பாஜக ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு ஏற்கெனவே நாங்கள் தயாராக இருந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு, வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள். மாவட்ட அளவில், மண்டல அளவில் நடக்கக்கூடிய நேர்காணல்கள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலத் தலைவர் அண்ணாமலை வேட்பாளர்களை அறிவிப்பார்.
இந்த அறிவிப்புக்குப் பின்னர் அனைத்து மட்டங்களிலும், ஜனவரி 31-ஆம் தேதிக்குப் பின்னர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும். எங்களுடைய தேர்தல் முன் தயாரிப்புகள் ஏறக்குறைய முழுமைப்பெற்று, இன்னும் இரண்டு நாட்களுக்குள் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு,வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும்.அதிமுக கூட்டணி குறித்து கலந்துரையாடி இருக்கிறோம். கூட்டணி குறித்து எந்தவிதமாக முடிவெடுப்பது என்பது தொடர்பான முழு அதிகாரமும் மாநிலத் தலைவர் அண்ணாமலை பெற்றிருக்கிறார்" எனத் தெரிவித்திருந்தார்.