குமராட்சி அருகே கீழவன்னியூரில் அரசு கலைக்கல்லூரி கட்டுவதற்காக 3 ஏக்கர் நிலத்தை தொழிலதிபர் கேதார்நாதன் அரசு பெயரில் பத்திரப்பதிவு செய்து கோட்டாட்சிர் ரவியிடம் தானமாக வழங்கினார். 
தமிழகம்

குமராட்சி அருகே அரசு கல்லூரி கட்ட 3 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தொழிலதிபர்கள்

செய்திப்பிரிவு

காட்டுமன்னார்கோவிலில் அரசு கலைக் கல்லூரி அமைக்க கடந்த 2017-ம் ஆண்டு அப்போது அதிமுக எம்எல்ஏவாக இருந்த முருமாறன் முயற்சியில் தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து எம்ஜிஆர் அரசு கலை, அறிவியல் கல்லூரி என்று பெயரிடப்பட்டு காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் கல்லூரி தொடங்கப்பட்டது.

சரியான இடம் கிடைக்காமல் கல்லூரி கட்டுவதற்கு தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனையறிந்த சிதம்பரத்தில் ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வரும் சகோதரர்களான தொழிலதிபர்கள் சேதுராமன், கேதார்நாதன், சுவேதகுமார் ஆகியோர் குமராட்சி அருகே உள்ள கீழவன்னியூர் கிராமத்தில் அவர்களுக்கு சொந்தமாக உள்ள3 ஏக்கர் நிலத்தினை தானமாகவும், அவர்களது பராமரிப்பில் இருந்த புறம்போக்கு நிலம் 1 ஏக்கர் 20 சென்டையும் சேர்த்து அரசு கலைக் கல்லூரி கட்டுவதற்கு வழங்க ஒப்புதல் அளித்தனர்.

அதனடிப்படையில் நேற்று குமராட்சி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் தொழிலதிபர் கேதார்நாதன் அந்த நிலத்தை அரசுக்குப் பத்திரப்பதிவு செய்தார். குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்வாணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT