சென்னை: மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், மறைந்த முதல்வர் கருணாநிதி திருத்தங்கள் செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை திருத்தியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரான ஜெ.மோகன்ராஜ் கடந்த 2007-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "நீராரும் கடலுடுத்த" எனத் தொடங்கும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலின் இரண்டாவது பத்தியில், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துலு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை குறிப்பிடும் வரிகளை நீக்கி, கடந்த 1970-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த மு.கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்தார்.
அதன்படி, அப்போது முதல் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு வருகிறது. சமஸ்கிருதம் போல் அல்லாமல் தமிழ் மொழி இளமையாக இருப்பதை குறிப்பிடும் வகையிலும், பிற திராவிட மொழிகளை ஒப்பிட்டும் கூறப்பட்ட வரிகளை நீக்கியது மனோன்மனியம் சுந்தரனாரருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயல். எனவே திருத்தப்பட்ட பாடலை தமிழ் பாடப்புத்தங்களில் இடம்பெற செய்துள்ளதையும், அரசு விழாக்களில் பாடுவதையும் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்' என கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி ’தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றியமைக்க அரசுக்கு உரிமை உள்ளது. அந்த பாடலுக்கான காப்புரிமையை மனுதாரர் பெற்றிருக்கவில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என வாதிட்டார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 1970-ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டு வரும் நிலையில், 37 ஆண்டுகள் கழித்து வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், ஜெபமணி மோகன்ராஜ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.