சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட 18 குற்றவியல் அவதூறு வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், முதல்வரின் செயல்பாடுகளை விமர்சித்தது, டெண்டர் முறைகேடு, வாக்கிடாக்கி கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்த கருத்து தெரிவித்ததாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக 18 குற்றவியல் அவதூறு வழக்குகள் தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்டன. செய்தி வெளியிட்ட முரசொலி ஆசிரியர் செல்வம், கலைஞர் டிவி ஆசிரியர் திருமாவேலன் ஆகியோர் மீதும் வழக்குகள் தொடரபட்டன.எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதித்திருந்தது.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், முந்தைய அதிமுக ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெற்று அரசாணை பிறப்பித்துள்ளது.அதேபோல ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள 18 அவதூறு வழக்குகளையும் திரும்பபெற தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடபட்டது.
இந்நிலையில் தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மு.க.ஸ்டாலினுக்கு எதிராக நிலுவையில் உள்ள 18
குற்றவியல் அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான அரசாணை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பான விவரங்களை அட்டவணையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ரம், வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.
இந்தநிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அவதூறு வழக்குகளை திரும்பப் பெற்ற அரசாணையை ஏற்று, மு.க.ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்று, அவர் மீதான அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து தீர்ப்பளித்தார்.