தமிழகம்

படப்பிடிப்புக்கான டம்மி ஆயுதங்களை இடையூறின்றி எடுத்துச் செல்ல விதிகள் வகுக்க கோரி வழக்கு

செய்திப்பிரிவு

சென்னை: திரைப்பட படப்பிடிப்புக்கான டம்மி ஆயுதங்களை போலீஸாரின் இடையூறு இல்லாமல் எடுத்துச்செல்லும் வகையில் தகுந்த விதிகளை வகுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தென் இந்தியதிரைப்பட டம்மி எபெக்ட்ஸ் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்றது. படப்பிடிப்புக்கு தேவையான டம்மி துப்பாக்கிகளை உதவி இயக்குநர் விக்டர் என்பவர் எடுத்துச் சென்றார். அப்போது அவரிடமிருந்த டம்மி துப்பாக்கிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும், சென்னையில் உள்ளகிடங்கிலிருந்து 150 டம்மி துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் திரைப்பட படப்பிடிப்பு பணியில் தேவையில்லாத இடையூறும், பொருட்செலவும், காலவிர யமும் ஏற்பட்டது.

எனவே திரைப்பட படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் டம்மி ஆயுதங்களை போலீஸாரின் இடையூறு இல்லாமல் எடுத்துச் செல்லும் வகையி்ல் அனுமதி வழங்க தகுந்த விதிமுறைகளை வகுக்க வேண்டும். இதுதொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சமீபத்தில் மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மும்பையில் டம்மி ஆயுதங்களுக்கு எண்ணிடப்பட்டு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல தமிழகத்திலும் சங்கஉறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி டம்மி ஆயுதங்களுக்கு உரிய உரிமங்களை வழங்கும் வகையில் தகுந்த விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும்,

இவ்வாறு மனுவில் கோரப் பட்டுள்ளது. இந்த வழக்கு விரை வில் விசாரணைக்கு வரவுள்ளது.

SCROLL FOR NEXT