மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கான வேலை நாட்களை அதிகரித்து, ஊதியத்தையும் ரூ.250 ஆக உயர்த்தி மத்திய அரசு கொடுக்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் கிராமப்புற ஏழை, எளிய, மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
கடந்த 1-ம் தேதி முதல் இத்திட்டத் துக்கான கூலியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் இத் திட்டத்துக்கான கூலி ரூ.183-லிருந்து ரூ.203 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவானதாகும்.
விலைவாசி கடுமையாக உயர்ந்திருப்பதால் தினக்கூலியாக குறைந்தபட்சம் ரூ.250 கொடுத்தால்தான் மக்கள் அன்றாட வாழ்க்கையை ஓரளவுக்கு நிம்மதியாக நடத்த முடியும். விவசாயத் தொழிலுக்கு இத்தொழிலாளர்களை பயன்படுத்தும் வகையில் மத்திய அரசு இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.