சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக இருந்த புவியரசன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய இயக்குநராக செந்தாமரைக் கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த திடீர் கனமழையை சென்னை வானிலை ஆய்வு மையம் கணிக்கத் தவறிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக இருந்த புவியரசன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய இயக்குநராக செந்தாமரைக் கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இயக்குநராக இருந்த புவியரசன், செந்தாமரைக் கண்ணன் வகித்த காலநிலை மாற்ற மையத்தின் சென்னை இயக்குநர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.